நிலக்கரி சுரங்க ஊழல்: ரதி ஸ்டீல் நிறுவன அதிகாரிகள் 3 பேர் குற்றவாளிகள்- சிபிஐ கோர்ட் தீர்ப்பு
டெல்லி: சத்தீஸ்கரில் முறைகேடாக நிலக்கரி வெட்டி எடுக்க உரிமம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ரதி ஸ்டீல் நிறுவன அதிகாரிகள் 3 பேரை குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 3 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இம்மூவருக்குமான தண்டனை விவரம் பிற்பகலில் அறிவிக்கப்படும்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அண்மையில் நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளில் முதல் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இஸ்பத் வழக்கில் தீர்ப்பு
இஸ்பத் நிறுவனத்தின் இயக்குனர்களான ருங்தா சகோதரர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 லட்சம் அபராதமும் இஸ்பத் நிறுவனத்துக்கு தனியாக ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
ரதி ஸ்டீல் வழக்கிலும் தீர்ப்பு
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரதி ஸ்டீல் அன்ட் பவர் லிமிடெட் நிறுவனம் மீதான வழக்கின் விசாரணை இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரதி ஸ்டீல் அன்ட் பவர் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரதீப் ரதி, தலைமை செயல் அதிகாரி உதித் ரதி, உதவி பொது மேலாளர் குஷால் அகர்வால் ஆகியோரை குற்றவாளிகள் என்று நீதிபதி பாரத் பிரசார் தீர்ப்பளித்தார்.
3 குற்றவாளிகள் கைது
மேலும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த 3 பேரையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த 3 பேருக்குமான தண்டனை விவரம் பிற்பகலில் அறிவிக்கப்பட உள்ளது.
சிபிஐ குற்றப்பத்திரிகையில்...
இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ரதி ஸ்டீல் நிறுவனம் மற்றும் உதித் ரதி ஆகியோர் மீதுதான் குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் நீதிபதி குற்றப்பத்திரிகையை ஆராய்ந்த பின்னர் பிரதீப் ரதி, குஷால் அகர்வால் ஆகியோரையும் வழக்கில் சேர்க்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.