நிலக்கரிச் சுரங்க முறைகேடு: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ராஞ்சி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா மீது சிபிஐ குறப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் லிமிடட் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக நிலக்கரிச் சுரங்க படுகைகள் ஒதுக்கிய வழக்கில் மது கோடா உள்பட 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மது கோடா, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமைச் செயலர் அசோக் குமார் பாசு உள்பட 8 பேர் மீது சிபிஐ இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இவர்கள் அனைவர் மீதும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 120-பி (கிரிமினல் சதி), 420 (ஏமாற்று) ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பிரச்சார் முன்னிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த விசாரணை அதிகாரி, இன்னும் 2 நாட்களில் வழக்கின் முக்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.