நிலங்கரி ஊழல்: ஜார்கண்ட் மாஜி முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு ஜெயில் - ரூ.25 லட்சம் அபராதம்
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Recommended Video
டெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மதுகோடா குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மதுகோடா. மதுகோடா முதல்வராக இருந்தபோது நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
அங்குள்ள ராஜ்ஹாரா என்ற இடத்தில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில், ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டுகள் வந்தன.
கொல்கத்தாவைச் சேர்ந்த வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் நிறுவனம் பயனடையும் வகையில் மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்டோர் தங்கள் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுக்களை கையில் எடுத்த சிபிஐ, மதுகோடா உள்ளிட்ட, 15 பேர் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தது. இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் மதுகோடா, எச்.சி.குப்தா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களுக்குப்பின் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் 16ஆம் தேதி சனிக்கிழமையன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். இன்று சிபிஐ நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டைனை விதித்து தீர்ப்பளித்தார். மதுகோடாவுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.