நிலக்கரி ஊழல்: டெல்லி, கொல்கத்தா, போபாலில் ரெய்டு- 2 தனியார் நிறுவனங்கள் மீது வழக்கு
டெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி, கொல்கத்தா, போபால் மற்றும் தன்பாத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
நிலக்கரி ஊழல் தொடர்பாக சிபிஐ இதுவரை 14 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்நிலையில் டெல்லி, கொல்கத்தா, போபால் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் ஆகிய இடங்களில் போலீசார் நிலக்கரி ஊழல் தொடர்பாக அதிரடி சோதனை நடத்தினர். இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்ட பி.எல்.ஏ. இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் காஸ்ட்ரன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மற்றும் பெயர் வெளியிடப்படாத நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் மீது சிபிஐ 2 வழக்குகள் தொடர்ந்துள்ளது.
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு 1993ம் ஆண்டில் இருந்து நடந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.