நிலக்கரி சுரங்க ஊழல்: ரதி ஸ்டீல் நிறுவன அதிகாரிகள் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை- சிபிஐ கோர்ட்
டெல்லி: சத்தீஸ்கரில் முறைகேடாக நிலக்கரி வெட்டி எடுக்க உரிமம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ரதி ஸ்டீல் நிறுவன அதிகாரிகள் பிரதீப், உதித்துக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது சிபிஐ நீதிமன்றம். இதே ரதி ஸ்டீல் நிறுவனத்தின் மற்றொரு அதிகாரியான குஷால் அகர்வாலுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளின் விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. அண்மையில் நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளில் முதல் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இஸ்பத் வழக்கு
அதில், இஸ்பத் நிறுவனத்தின் இயக்குனர்களான ருங்தா சகோதரர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 லட்சம் அபராதமும் இஸ்பத் நிறுவனத்துக்கு தனியாக ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
குற்றவாளிகள் என அறிவிப்பு
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரதி ஸ்டீல் அன்ட் பவர் லிமிடெட் நிறுவனம் மீதான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரதி ஸ்டீல் அன்ட் பவர் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரதீப் ரதி, தலைமை செயல் அதிகாரி உதித் ரதி, உதவி பொது மேலாளர் குஷால் அகர்வால் ஆகியோரை குற்றவாளிகள் என்று நீதிபதி பாரத் பிரசார் நேற்று தீர்ப்பளித்தார்.
தண்டனை அறிவிப்பு
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த 3 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று 3 பேருக்கான தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தார்.
சிறைதண்டனை விவரம்
இதில் பிரதீப் மற்றும் உதித்துக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் குஷால் அகர்வாலுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் பிரதீப் மற்றும் உதித் ஆகியோருக்கு தலா ரூ25 லட்சம் அபராதமும் ரதி ஸ்டீல் நிறுவனத்துக்கு ரூ50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி பாரத் பிரசார் உத்தரவிட்டார். அதேபோல் குஷால் அகர்வாலுக்கு ரூ5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.