நிலக்கரி ஊழல்: மன்மோகன்சிங்கின் மாஜி ஆலோசகரிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மத்திய அரசின் பதவிக் காலத்தில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்றுவரும் இந்த வழக்கில் பல்வேறு நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிலக்கரி சுரங்க ஊழல் குறித்த வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 18ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாகவும், ஒருசில நாட்களில் அந்த விசாரணை நடைபெற வாய்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன