நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு: நிறுவனங்களின் மனுவை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!!
டெல்லி: சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிறுவனங்களின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 25-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், 1993-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஒதுக்கீடுகள் பாரபட்சமாகவும் வெளிப்படைத் தன்மையற்றும் மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
பாரபட்சமானவை
மேலும் 1992-ம் ஆண்டு முதல் நிலக்கரி ஒதுக்கீடு குறித்த தேர்வுக்குழுவின் 36 கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்ட அனைத்து நிலக்கரி ஒதுக்கீடுகளையும் சட்டவிரோதமானவை, பாரபட்சமுள்ளவை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
நிலக்கரி சுரங்கங்கள்
இதனைத் தொடர்ந்து நிலக்கரி சுரங்க உரிமங்கள் பெற்ற நிறுவனங்கள் தங்களையும் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தன.
மத்திய அரசு சொன்னது என்ன?
இவ்விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்த, மத்திய அரசு, கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து 2010-ம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட 218 நிலக்கரிச் சுரங்க உரிமத்தை ரத்து செய்வது குறித்து உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது.
46 சுரங்கங்கள்
இந்த 218 சுரங்கங்களின் உரிமங்களில் 46 உரிமங்களை அனுமதிப்பது குறித்து உச்சநீதிமன்றம் பரிசீலிக்கலாம். இந்த 46 சுரங்கங்களில் தற்போது 40 சுரங்கங்கள் நிலக்கரியை உற்பத்தி செய்து வருகின்றன. மேலும் 6 சுரங்கங்கள் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளன என்று தெரிவித்து. இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நிறுவனங்கள் மனு- நிராகரிப்பு
இதனைத் தொடர்ந்து தற்போது மின் உற்பத்தி செய்து வரும் நிறுவனங்கள் சில மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி மறு விசாரணை நடத்த வலியுறுத்தின. ஆனால் இந்த நிறுவனங்களின் மனுவை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.