மாயமான விமானத்தைக் கண்டுபிடிக்க இஸ்ரோவின் உதவியை நாடியது கடலோரக் காவல் படை
டெல்லி: ஆம்லா ஆபரேஷன் கண்காணிப்புக்குச் சென்ற போது 3 விமானிகளுடன் மாயமான டார்னியர் விமானத்தைத் தேடுவதற்கு இஸ்ரோவிடம் உதவி கேட்கப் பட்டுள்ளது.
கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் சி.ஜி.791 ரக விமானம், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இரவு 9.20 மணியளவில் மாயமானது. கடைசியாக சிதம்பரத்தில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் கிழக்கு திசையில் பறந்து கொண்டிருந்ததாக திருச்சியில் உள்ள ரேடார் கருவியில் அந்த விமானம் பதிவாகியுள்ளது.
விமானம் மாயமான தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டவுடன் உடனடியாக தரை வழியாகவும், கடல் வழியாகவும் தேடுதல் பணி தொடங்கப்பட்டது. முழு வீச்சில் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காணாமல் போன டார்னியர் விமானத்தை தேடுவதற்கு இஸ்ரோவிடமும் உதவி கேட்கப் பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தின் உதவியுடன் விமானத்தின் சிக்னலை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தவிர 3 விமானிகளுடன் மாயமான விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப் படுகிறது. எனவே, விசாகப்பட்டிணத்திலிருந்து கப்பற்படையின் நீர்மூழ்கி கப்பல் மூலமும் விமானம் தேடப்பட உள்ளது. நீர்மூழ்கி கப்பல் மூலம் தேடும் பணி இன்று மாலைக்குள் துவங்கப்படும் என கடலோர பாதுகாப்பு படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி.ஷர்மா தெரிவித்துள்ளார்.
மாயமான விமானம் பலமான காற்று வீசினாலே தாக்கு பிடிக்கக் கூடியதல்ல எனக் கூறப்படுகிறது. எனவே, எதிர்பாராதவிதமாக பலத்த காற்று வீசி அதில் விமானம் தூக்கி வீசப் பட்டிருந்தால், அது கடலுக்கு அடியில் சென்று புதைந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப் படுகிறது.
அவ்வாறு நடந்திருந்தால் கடலின் மேற்பரப்பில் தேடி எந்தப் பயனும் இல்லை என்பதால் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தேடும் பணி துவக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.