கேரளாவில் பிடிப்பட்ட படகில் இருந்தவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளா? : ரா, ஐபி, உளவுப்பிரிவினர் விசாரணை
திருவனந்தபுரம்: கேரளாவின் ஆழப்புழா கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த ஈரான் நாட்டு மீன்பிடி வந்த 12 பேரில் ஐவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகளா? என்ற கோணத்தில் ‘ரா', ஐ.பி உளவுப்பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே நடுக்கடலில் ஒரு மர்ம படகு நிற்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக கொச்சியில் உள்ள கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கொச்சியில் இருந்து ‘அபிநவ்' என்ற கப்பலில் ஆலப்புழாவுக்கு விரைந்த கடலோர பாதுகாப்பு படையினர். அங்கிருந்து 50 நாட்டில்கல் மைல் தொலைவில் நின்றுகொண்டிருந்த படகை சுற்றி வளைத்து விசாரித்தனர்.
12 பேர் யார்? யார்?
பரூக்கி என்ற ஈரான் நாட்டை சேர்ந்த அந்த படகில் 12 பேர் இருந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்தனர். இதில் படகின் கேப்டன் அப்துல் மஜீத்(30), ஷஹஷாத்(32), உஷேன்(48), ஜம்ஷாத்(25), முகம்மது(26), அகம்மது(40), காசிம்(50), அப்துல்காதர்(50), பரேஷ்(45), வாசித்(35), ஷாகித்(30), இலாகிம்(40) எனவும், அனைவரும் ஈரானில் இருந்து மீன்பிடிக்க வந்ததாகவும் தெரிவித்தனர். ஆனால் படகில் மீன்கள் எதுவும் இல்லை.இதனால் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்தனர்.
மர்ம அறை
அப்போது படகில் ஒரு ரகசிய அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறையில் உருதுமொழியில் எழுதப்பட்ட ஒரு அடையாள அட்டையும் இருந்தது. அந்த அடையாள அட்டைக்கு சொந்தக்காரர் படகில் இல்லை. இதையடுத்து, கடலோர பாதுகாப்பு படையினர் படகையும், அதில் இருந்த 12 பேரையும் திருவனந்தபுரம் விழிஞ்ஞம் கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர்.
ரா, ஐ.பி விசாரணை
இதுபற்றி தகவல் கிடைத்து, மத்திய உளவு பிரிவான ரா, ஐ.பி மற்றும் ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் விடிய விடிய 12 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதில் 5 பேர் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதும், 7 பேர் ஈரானை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் கடந்த மே 25ம் தேதி, ஈரானில் கலத் என்ற இருந்து படகில் புறப்பட்டு, ஒரு மாததிற்கும் மேலாக இந்திய கடல் எல்லையில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்து உள்ளது.
தீவிரவாதிகளா?
இவர்கள் போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா தீவிரவாதிகளா என உளவுத்துறையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர். படகில் உள்ள ரகசிய அறையில் போதை பொருட்களை பதுக்கி வைத்திருக்கலாம் எனவும், போலீசாரை பார்த்ததும் அவற்றை கடலில் வீசி இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் 12 பேரையும் இன்று திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தொடர் நடவடிக்கை
இந்திய கடல் எல்லைப்பகுதியில் மர்மப்படகுகள் ஊடுருவது தொடர் நடவடிக்கையாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகை இந்திய கடற்படையினரும் கடலோர காவல் படையினரும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் ரூ.600 கோடி மதிப்புள்ள போதை பொருள்கள் சிக்கின. மேலும் அந்த படகில் இருந்த பாகிஸ்தானை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.