யாசின் பத்கல் அடைக்கப்பட்டிருந்த அறையில் புகுந்த நாகப் பாம்பு!
பெங்களூர்: இந்தியன் முஜாஹிதீன் நிறுவனரான யாசின் பத்கல் அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் விசாரணை அறையில் விஷத்தன்மை கொண்ட நாகப் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தை தனது சகோதரருடன் இணைந்து நிறுவியர் யாசின் பத்கல். கடந்த ஆண்டு இவர் நேபாளத்தில் வைத்து பிடிபட்டார். தற்போது இவரை பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியம் குண்டு வெடிப்பு வழக்கில் பெங்களூர் போலீஸார் காவலில் எடுத்து பெங்களூர் கொண்டு வந்துள்ளனர்.
பெங்களூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் அவரை ஒரு முக்கிய இடத்தில் தங்க வைத்துள்ளனர். பத்கலிடம் தற்போது போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பத்கல் வைக்கப்பட்டிருந்த அறையில் நாகப் பாம்பு புகுந்ததால் பரபரப்பாகியுள்ளது. இந்த பாம்பு எப்படி வந்தது என்பது தெரியவில்லை. யாரேனும் வேண்டும் என்றே விட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாம்பைப் பிடித்து கொண்டு சென்று விட்டனர். பாம்பு யாசினைக் கடிக்கவும் இல்லை. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாம்.