பாம்பை தோள் மீது போட்டு செல்பி எடுக்க முயற்சித்த இளைஞர் பரிதாபப் பலி!
செல்பி எடுக்க நினைத்த இளைஞர் பாம்புக் கடித்ததால் மரணம்.
Recommended Video
நெல்லூர் : செல்பி எடுக்க முயற்சித்த நபரைப் பாம்பு கடித்துக் கொன்ற சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனில் கேமரா வந்தபிறகு, செல்பி மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆபத்தான இடங்களிலும் மக்கள் சிந்திக்காமல் செல்பி எடுப்பது சமயத்தில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. அப்படிப்பட்ட சம்பவம் தான் இதுவும்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள மங்கல்பாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் என்ற இளைஞர். இவர் கடந்த திங்களன்று தனது நண்பர்களுடன் திரைப்படம் பார்க்க சூலூர்பேட்டை சென்றிருந்தார். அப்போது அங்கே சாலையில் பாம்பாட்டி ஒருவர், பாம்பை வைத்து பொதுமக்களிடம் வேடிக்கைக் காட்டி பணம் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த ஜெகதீஷூக்கு பாம்புடன் செல்பி எடுக்க வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டது. அவர் தனது ஆசையை பாம்பாட்டியிடம் தெரிவித்துள்ளார். பாம்பாட்டியும் அதற்கு சம்மதிக்கவே, பாம்பைக் கையில் பிடித்து சிறிதுநேரம் விளையாடியுள்ளார் ஜெகதீஷ். பின்னர் பாம்பாட்டி, பாம்பை எடுத்து ஜெகதீஷின் தோள் மீது போட்டார்.
அப்போது பாம்பை பிடித்தபடி, ஜெகதீஷ் செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். அதுவரை சாந்தமாக இருந்த பாம்பு, திடீரென ஜெகதீஷைக் கடித்தது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக ஜெகதீஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை ஜெகதீஷின் நண்பர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
செல்பி மோகத்தால் ஜெகதீஷ் பலியான சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.