சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி) அமல்படுத்தினால் ஆலைகளை மூடுவோம்... மிரட்டுகிறது கோக கோலா
டெல்லி: ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு சேவை வரியை அமல்படுத்தினால் இந்தியாவில் செயல்படும் கோக கோலா ஆலைகளை மூடுவோம் என அந்நிறுவனம் மிரட்டியுள்ளது.
குளிர்பானங்களை தயாரித்து வரும் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட கோக கோலா நிறுவனம் இந்தியாவில் 57 ஆலைகளை நடத்தி வருகிறது.
அண்மையில் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் அளித்துள்ள பரிந்துரையில், சரக்கு-சேவை எனப்படும் ஜி.எஸ்.டி. வரியின் கீழ் காற்றடைத்த குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, குடிநீர், குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் சேர்க்கப்படும். அவைகளுக்கு 40% வரை ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கோக கோலா நிறுவனத்தின் துணைத் தலைவர் இஸ்தியக் அம்ஜத், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இந்திய குளிர்பான நிறுவனங்களின் செயல்பாட்டை வெகுவாக பாதிக்கும்.
இது அரசின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு எதிராகவும் அமையும். அரவிந்த் சுப்பிரமணியனின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் குளிர்பான நிறுவன தொழிலே அடியோடு முடங்கிவிடும்.
இத்தொழில் ஈடுபட்டுள்ள லட்சகணக்கான சிறு வியாபாரிகள், முகவர்கள், போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளோர், குளிர்பான பாட்டில்கள் தயாரிப்போர், குளிர்பான நிறுவனங்களுக்கான மூலப் பொருள்கள் தயாரிப்போர் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இதனால் கோக கோலா நிறுவனத்துக்காக இந்தியாவில் செயல்படும் சில ஆலைகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்றார்.