தடையை மீறி “சேவல் சண்டை” துவக்கி வைத்த ஆளும்கட்சி எம்.பி - ஆந்திராவில் பரபர...
கோதாவரி: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் தடையை மீறி சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது போல் ஆந்திர மாநிலத்தில் சங்காராந்தி பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்தப்படுவது வழக்கம்.
சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி ஒன்றோடு ஒன்று மோதவிடும் சேவல் சண்டையில் ஏதாவது ஒரு சேவல் இறந்தாலோ அல்லது எழுந்து நிற்க முடியாத அளவுக்கு ரத்தகாயம் அடைந்தாலோ மட்டுமே போட்டி முடிவுக்கு வரும்.
தடையை மீறி சேவல் சண்டை:
இதனால் சேவல் சண்டைக்கு ஆந்திர உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தடை விதித்தது. ஆனால் தடையை பொருட்படுத்தாமல் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரில் நடைபெற்ற சங்கராந்தி விழாவில் சேவல் சண்டை நடத்தப்பட்டது.
உச்சநீதிமன்றம் தடை:
ஆளும் தெலுங்கு சேதம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகந்திவெங்கடேஸ்வரா ராவ் சேவல் சண்டையை தொடங்கி வைத்தார். காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சர்ச்சை சண்டை:
ஆனால் அண்டை மாநிலமான ஆந்திராவில் தடையை கண்டுகொள்ளாமல் சேவல் சண்டை நடத்தப்பட்டிருப்பதுடன் அதனை ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரே தொடங்கி வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
100 கோடி பந்தயம்:
கடந்த ஆண்டும் உச்சநீதிமன்ற தடையை மீறி ஆந்திராவில் பல 100 கோடி ரூபாய் பந்தயம் கட்டப்பட்டு சேவல் சண்டை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.