காபி விவசாயிகளுக்கு உதவ செல்போன் ஆப் அறிமுகம்
டெல்லி: மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, காபி விவசாயிகள் நலனுக்கு உதவும் செல்போன் ஆப்களை அறிமுகம் செய்தார்.
காபி கனெக்ட் (Coffee Connect) என்ற பெயரில் ஆப் ஒன்றை டெல்லியில் அவர் அறிமுகம் செய்தார். காபி உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், சுற்றுச்சூழல் குறித்து அறிந்து கொள்ளவும், மேலும் காபி விவசாயம் தொடர்பான பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ளவும் இந்த ஆப் உதவி செய்யும்.
காபி வாரியம் மற்றும் இந்தியா வளர்ச்சி பவுண்டேஷன் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த ஆப்பை உருவாக்கியுள்ளன.
இதேபோல Coffee Krishi Taranga என்ற ஆப்பும் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் கட்டமாக கர்நாடகாவின் சிக்மகளூர் மற்றும் ஹாசன் மாவட்டங்களில் 30,000 காப்பி விவசாயிகளிடம் இந்த ஆப் பரிசோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் பிறகு நாடு முழுக்க இந்த செல்போனை ஆப் விரிவாக்கம் செய்யப்படும். காபி செடி பரவும் நோய் மற்றும் பூச்சிகள் குறித்து அறிந்து கொள்ளவும் ஆப் மூலம் முடியும்.
இந்த ஆப்கள் அறிமுக நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, காபி வாரியம் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீவத்சா கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஸ்ரீவத்சா கிருஷ்ணா கூறுகையில், டெக்னாலஜியை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தினால், அவை நல்லபடியான மாற்றங்களை சமூகத்திற்கு கொண்டுவரும். பல லட்சம் விவசாயிகள் காபி தொழிலை நம்பியுள்ளனர். அவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார்.