மேற்கு வங்கத்தில்.. கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ... பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன் கைது.. ஏன் தெரியுமா?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பா.ஜ.க மகளிர் அணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் அமைதியான போராட்டங்கள் கூட தவறா? என்று வானதி சீனிவாசன் டுவிட்டர் பதிவில் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க எம்.பி. ரூபா கங்குலி, மேற்கு வங்க மாநில பா.ஜ.க மகளிர் அணித் தலைவர் அக்னிமித்ரா பால் உள்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.
அங்கன்வாடி பணி நியமனத்தில் அதிமுகவினரின் மிரட்டலுக்கு பணியாத பெண் சிங்கம்.. யார் இந்த அனு ஜார்ஜ்!
மம்தா அசத்தல் வெற்றி
மேற்கு வங்கத்தில் சுமார் 200 இடங்களுக்கும் மேல் பெற்ற மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஹாட்ரிக் வெற்றி பெற்றது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜக சுவேந்து அதிகாரியிடம் தோல்வியை தழுவினார். இதனால் அதிர்ச்சி அடைந்த திரிணாமுல் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கடும் வன்முறை
பாஜக தொண்டர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. பாஜகவினரின் கடைகள், வீடுகள் தீ வைத்து அடித்து நொறுக்கப்பட்டதாவும், இந்த வன்முறையில் 6 பாஜகவினர் கொல்லப்பட்டனர் எனவும் குற்றம்சாட்டப்பட்டன. பதிலுக்கு பாஜக தொண்டர்களும் திரிணாமுல் கட்சியினரை தாக்கியதாக கூறப்படுகிறது.
பாஜக போராட்டம்
இந்த வன்முறை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கண்டித்து மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று பா.ஜ.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மகளிர் அணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், பா.ஜ.க எம்.பி. ரூபா கங்குலி, மேற்கு வங்க மாநில பா.ஜ.க மகளிர் அணித் தலைவர் அக்னிமித்ரா பால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வானதி சீனிவாசன் கைது
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வானதி சீனிவாசன் உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக வானதி சீனிவாசன் தனது டுவிட்டர் பதிவில் ''மேற்கு வங்கத்தில் அமைதியான போராட்டங்கள் கூட தவறா? மம்தா பானர்ஜி இப்படி தான் தனது அரசாங்கத்தை நடத்துகிறாரா? என்று பதிவிட்டுள்ளார்.