அதெப்படி பெப்சி, கோக் விற்பனையை தடுக்கலாம்... கேட்கிறார் மத்திய அமைச்சர்
தமிழகத்தில் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களான பெப்சி, கோக் விற்பனையை தடை செய்தது நாட்டின் ஜனநாயக மாண்பிற்கு எதிராக அமையும் என்று மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர், ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்த
டெல்லி: தமிழகத்தில் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களான பெப்சி, கோக் விற்பனையை தடை செய்தது நாட்டின் ஜனநாயக மாண்பிற்கு எதிராக அமையும் என்று மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் நடைபெற்ற போது, பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கருத்து முன்வைக்கப்பட்டது. மேலும் அன்னிய நாட்டு பொருட்களைப் புறக்கணிக்கும் அழைப்பும் விடுக்கப்பட்டது. இதற்கு முதல் பலிகடா பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்கள்தான்.
பன்னாட்டு நிறுவனங்களான பெப்சி, கோக் குளிர்பானங்களை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள கடைகளில் விற்பனை செய்ய போவதில்லை என்று வணிகர்Kள் அதிரடியாக அறிவித்தனர். மார்ச் 1ம் தேதி முதல் இது நடைமுறைக்கும் வந்துள்ளது. கிட்டத்தட்ட முக்கால்வாசிக் கடைகளில் பெப்சி, கோக் விற்பனை அடியோடு நின்று விட்டது.
இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மத்திய பாஜக அரசு இதுகுறித்து கவனம் திருப்ப ஆரம்பித்துள்ளது. அகாலிதளம் கட்சியை சேர்ந்தவரும், மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்பனைக்கு வணிகர் சங்கத்தினரின் தடை விதித்துள்ளனர். வணிகர் சங்கத்தினரின் இந்த முடிவு ,நாட்டின் ஜனநாயக மாண்பிற்கு எதிரானது. தாங்கள் விரும்பும் உணவை சாப்பிட நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது. இத்தகைய செயல்களால், கள்ளச் சந்தை வியாபாரங்கள் பெருகும் . எனவே தமிழக வியாபாரிகள் செயல்களை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் உணர்வுகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசு தற்போது பெப்சி கோக் விவகாரத்தில் மறைமுகமாக அல்லது நேரடியாக விரைவிலையே தலையிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காரணம், பிரதமர் மோடியை, பெப்சி தலைவர் இந்திரா நூயி டெல்லி வந்து சந்தித்து விட்டுப் போயுள்லார் என்பதால்.