ஆந்திரா, தெலுங்கானாவைப் புரட்டி எடுக்கும் டெல்லி 'குளிர் காற்று'
நகரி: தலைநகர் டெல்லியில் இருந்து வீசும் குளிர்ந்த காற்றே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஏற்பட்டுள்ள கடும் குளிருக்கு காரணம் என்று மத்திய சுற்றுசூழல் துறை தெரிவித்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த வாரம் கோடை காலம் போல் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. வட தெலுங்கானா வட கடலோர ஆந்திராவில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது.
விசாகப்பட்டினம், லம்பாசிங்கியில் 3 டிகிரியும், ஆதிலாபாத்தில் 4 டிகிரியும் வெப்பநிலை பதிவானது. மக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தனர். நடுக்கும் குளிரால் மக்கள் உறைந்து போகும் அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு இரவு போல் பகல் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் ஆந்திராவின் கடுமையான குளிருக்கு டெல்லி உள்பட வட மாநிலங்களில் இருந்து வீசும் காற்றே காரணம் என்று இந்திய சுற்றுச்சூழல் துறை தெரிவித்து உள்ளது.
வடமாநிலங்களில் தற்போது கடுமையான குளிர் நிலவுகிறது. அங்கிருந்து வேகமாக காற்று வீசுவதால் ஆந்திரா மற்றும்தெலுங்கானா மாநிலத்தில் குளிர் நிலவுகிறது. இன்னும் 2 நாள் இந்த பருவநிலை நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.