நீதிபதி ஜோசப் நியமன சர்ச்சை... கொலீஜியம் இன்று அவசரமாக கூடுகிறது!
உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக வழங்கப்பட்ட பதவி உயர்வை மத்திய அரசு ஏற்காதது குறித்து இன்று கொலீஜியம் கூடி விவாதம் நடத்த உள்ளது.
டெல்லி: உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக வழங்கப்பட்ட பதவி உயர்வை மத்திய அரசு ஏற்காதது குறித்து இன்று கொலீஜியம் கூடி விவாதம் நடத்த உள்ளது.
உச்ச நீதிமன்றத்திற்கு புதிதாக நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலீஜியம் அமைப்பு அனுப்பிய நீதிபதிகள் பட்டியலை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் வழக்கம், ஆனால் இந்த முறை உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப் பெயரை மட்டும் பரிந்துரையில் இருந்து நீக்கும்படி மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
அவரது பெயர் மூப்பின் அடிப்படையில் இப்போது வர கூடாது என்று கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் இதற்கு ஆதரவாக பேசியுள்ளார். இந்த பிரச்சனை பூதாகரமானது. மத்திய அரசு அவர்களுக்கு பிடித்த நபர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்குகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறியது.
இந்த நிலையில் தற்போது இதுகுறித்து விவாதம் நடத்த கொலீஜியம் கூட உள்ளது. கொலீஜியத்தில் உள்ள எல்லா உறுப்பினர்களும் கூடி, ஜோசப் நியமனம் குறித்து விவாதிக்க இருக்கிறார்கள். ஜோசப் நியமனத்தில் முக்கிய முடிவுகள் இதில் எடுக்கப்படலாம் .