ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்- கர்னல், மேஜர் உள்ளிட்ட 5 ராணுவத்தினர் வீர மரணம்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கர்னல், மேஜர் உள்ளிட்ட 5 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் வடக்கில் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் அதிரடி தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனால் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து சஞ்முல்லா பகுதியில் இருதரப்பினரிடையே பயங்கர மோதல் நடைபெற்றது.
அப்போது பொதுமக்களையும் பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாகவும் பிடித்து வைத்தனர். இவர்களை மீட்க கூடுதல் பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
இம்மோதல் 24 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. இம்மோதலில் 21-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையின் கர்னல் அஸுதோஷ் ஷர்மா உட்பட 5 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மோடி, அமித்ஷா இரங்கல்
காஷ்மீர் மோதலில் வீரமரணம் அடைந்த கர்னல் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வீரமரணமடைந்துள்ளனர் வீரர்கள். இந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.