காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: ‘யுத் சேவா’ விருது பெற்ற ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் பலி
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 66வது குடியரசு தினத்தன்று யுத் சேவா விருது பெற்ற ராணுவ அதிகாரி உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமாக மாவட்ட உள்ள டிரால் என்ற இடத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கர்னல் முனிந்த்ரா நாத் ராய் தலைமையில் ராணுவத்தினர் மற்றும் போலீசார் ஆகியோர் டிரால் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் .
அப்போது தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில், கர்னல் முனிந்த்ரா நாத் ராய்க்கு குண்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஸ்ரீநகரில் உள்ள பதாமி பாக் கன்டோண்மன்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வீர மரணமடைந்தார்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் , ராணுவ வீரர் ஒருவரும், தலைமை காவலர் ஒருவரும் குண்டடிப்பட்டு உயிரிழந்தனர். ராணுவத்தினர் நடத்திய எதிர் தாக்குதலில் தீவிரவாதிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரி கர்னல் முனிந்த்ரா நாத் ராய்க்கு, 66வது குடியரசு தினத்தின் போது யுத் சேவா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.