மக்களின் ரத்தத்தில் ஊறிய ‘மதச்சார்பின்மை’ சொல்லை மத்திய அரசு நீக்காது: வெங்கய்யா நாயுடு
டெல்லி: இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து, மதச்சார்பின்மை, சோசலிஸம் ஆகிய 2 சொற்களும் நீக்கப்படாது என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு உறுதிபடக் கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் "தமிழகத்தில் நவீன நகரங்கள் உருவாக்கம்' என்ற தலைப்பில் மாநாடு சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அம்மாநாட்டைத் தொடக்கி வைத்து வெங்கய்ய நாயுடு பேசியதாவது:-
மத்திய அரசின் நவீன நகரங்களை உருவாக்கும் திட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3 நவீன நகரங்கள் அமைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. நகர்ப்புற மேம்பாட்டில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
நவீன நகரங்கள் அமைப்பது தொடர்பாக தில்லியில் நடைபெற்று வரும் மாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த இடங்களில நவீன நகரங்கள் அமைக்கலாம் என்பது ஆலோசித்து, முடிவு செய்யப்படும். விசாகப்பட்டினம், அலகாபாத், அஜ்மீர் ஆகியவற்றை நவீன நகரங்களாக மேம்படுத்த அமெரிக்க வர்த்தக, மேம்பாட்டு அமைப்போடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளோம்.
மேலும், ஜெர்மனி, ஜப்பான், சுவீடன், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, உள்பட 12 நாடுகள் வரை நவீன நகரங்களின் மேம்பாட்டுக்கு பல்வேறு வகையில் ஒத்துழைப்பு தர தயாராக உள்ளன.
கல்வி, சுகாதாரம் உள்பட அனைத்துத் துறைகளிலும் சிறந்த நிர்வாகத்தை அளிக்கும் வகையில் இந்த நவீன நகரங்கள் அமைக்கப்படும்.
நகரங்களுக்கான சவால்: மேலும் மத்திய அரசு புதிய முயற்சியாக நகரங்களுக்கான சவால் என்ற பெயரில் நகரங்களை மதிப்பீடு செய்ய உள்ளோம். சுகாதார மேம்பாட்டின் அடிப்படையில் இந்த மதிப்பீடு இருக்கும் என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் வெங்கையா நாயுடு. அப்போது அவர் கூறியதாவது:-
அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையில் உள்ள மதச்சார்பின்மை, சோசலிஸம் என்ற இரு வார்த்தைகள் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
பாஜக அரசைப் பொருத்தவரை, மதச்சார்பின்மை, சமத்துவத்தை முழுமையாக கடைப்பிடிக்கும். மதச்சார்பின்மை என்பது இந்திய மக்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்றாகும். இது நமது கலாசாரத்தின் அடையாளம்.
சிவசேனையின் விளம்பரம் என்பது இந்திய அரசியல் சாசன முகவுரையாக ஆக முடியாது. அரசின் அதிகாரப்பூர்வ விளம்பரம் மட்டுமே அரசியல் அமைப்புச் சட்டத்தை வெளிப்படுத்தும்.
எனவே, மதச்சார்பின்மை, சோசலிஸம் என்ற வார்த்தைகளை அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை எனத் தெரிவித்தார்.