ஜெய்ப்பூரில் வதந்தியால் இரு பிரிவினரிடையே மோதல்- தொலைபேசி இணைய சேவைகள் நிறுத்தம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வதந்தியால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 9 போலீசார் உட்பட 24 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து ஜெய்ப்பூரின் சில பகுதிகளில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
டெல்லி நெடுஞ்சாலையை ஒரு சமூகத்தைச் சேர்ந்த பிரிவினர் திங்களன்று இரவு வழிமறித்துள்ளனர். அப்போது ஹரித்வார் பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் பயணிகள் காயமடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு மற்றொரு பிரிவினரும் போலீசாரும் வந்தனர். அப்போது இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டு பெரும் வன்முறையாக வெடித்தது. கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இருசக்கர வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமையன்றே சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு குழுவினர் பக்தர்கள் சிலருடன் மோதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஜெய் ஶ்ரீராம் முழக்கம் எழுப்ப சொல்லி தாக்குதல்கள் நடத்தப்படுவதாக வதந்தியும் பரவியது.
இந்த வதந்தியை நம்பியே இருதரப்பும் வன்முறையில் இறங்கியிருக்கின்றனர். இதுவரை 9 போலீசார் உட்பட 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்ம்பவங்கள் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை பரவாமல் இருக்க ஜெய்ப்பூரில் சில பகுதிகளில் மொபைல் மற்றும் இணைய இணைப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.