குஜராத்தில் 3-வது நாளாக இரு சமூகங்களிடையே மோதல் நீடிப்பு- வாகனங்கள் தீக்கிரை- 80 பேர் கைது
கம்பத்: குஜராத்தின் கம்பத் பகுதியில் இரு சமூகங்களிடையே 3-வது நாளாக நேற்றும் மோதல் நீடித்தது. இப்பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தின் அனந்த் மாவட்டம் கம்பத் தாலுகா அக்பர்பூரில் ஜனவரி மாதம் இரு சமூகங்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையன்று மீண்டும் அதே பகுதியில் இரு சமூகங்களிடையே மோதல் உருவானது. இருதரப்பினரும் சரமாரியாக கற்கள் உள்ளிட்டவை மூலம் தாக்குதல் நடத்தினர். வீடுகள், வாகனங்கள் இம்மோதலில் தீக்கிரையாகின.
இம்மோதல் நேற்று செவ்வாய்க்கிழமையன்றும் 3-வது நாளாக நீடித்தது. கம்பத் நகரில் இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் இந்துத்துவா அமைப்பினர் அப்பகுதியில் முழு அடைப்புக்கும் நேற்று அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன.
விடமாட்டோம்.. எங்களை தாண்டி உள்ளே போகட்டும்.. இஸ்லாமியர்களுக்கு அரணாக நின்ற தலித்துகள், சீக்கியர்கள்
இது தொடர்பாக அகமதாபாத் ஐஜி ஐகே ஜடேஜா கூறுகையில், கம்பத் நகரில் ரோந்து பணியின் போது சமூக விரோதிகள் வாகனங்களுக்கு தீவைத்து எரித்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பகுதியில் கூடுதலாக கலவர தடுப்பு அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என கூறினார்.