நடுவுல கொஞ்சம் மங்கள்யான் காணாமப் போகப் போகுதாம்!
டெல்லி: பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையே சூரியன் வர இருப்பதால் ஜூன் மாதம் 15 நாட்கள் பூமியுடனான மங்கள்யானின் தொடர்பு துண்டிக்கப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரக மேற்பரப்பை ஆய்வு மேற்கொள்வதற்காக 450 கோடி ரூபாய் செலவில் மங்கள்யான் விண்கலத்தை 2013ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவியது.
ஆயிரத்து 350 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம் 66.6 கோடி கிலோ மீட்டர் பயணித்து செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. தற்போது செவ்வாயின் சுற்றுப்பாதையில் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக மங்கள்யான் விண்கலம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய கவலை ஒன்றைத் தெரிவித்துள்ளனர். அதாவது இந்தாண்டு ஜூன் மாதம் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரை பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையே சூரியன் வர உள்ளதாம். எனவே, அந்த 15 நாட்களும் மங்கள்யானுக்கும், இஸ்ரோவுக்கும் இடையிலான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘இந்த 15 நாட்களுக்குப் பிறகு நாம் மீண்டும் மங்கள்யானின் நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால், அது மிகப்பெரிய சாதனை'எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை உறுதி செய்துள்ள மங்கள்யானின் திட்ட இயக்குநர் அருணன், ‘இதே போன்ற நிலை 2016ம் ஆண்டும் வரலாம் எனத் தெரிவித்துள்ளார். அப்போது, செவ்வாய்க்கும், சூரியனுக்கும் இடையே பூமி வருகிறதாம்.
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும் இந்தியாவின் மங்கள்யான் தயாரிக்க ஆன செலவு 7.4 கோடி அமெரிக்க டாலர்கள். ஹாலிவுட் சினிமாவான கிராவிட்டி படத்தின் தயாரிப்புச் செலவு 10 கோடி டாலர்கள். கிராவிட்டி படத் தயாரிப்புக்கு ஆனதை விட குறைந்த செலவில் நாம் செவ்வாயை அடைந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் நடைபெறும் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டின்போது இந்தத் தகவலை வெளியிட்டார் ராதாகிருஷ்ணன்.