கார் கட்டுப்பாட்டால் ஒரே டிராபிக் ஜாம்: கோபத்தில் கொந்தளிக்கும் டெல்லிக்காரர்கள்
குர்காவ்ன்: கார் கட்டுப்பாட்டால் போக்குவரத்து நெரிசல் தான் ஏற்படுகிறது என்று டெல்லி மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.
டெல்லியில் காற்று அதிக அளவில் மாசு அடைந்துள்ளது. இந்நிலையில் மாசை குறைக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கார்களுக்கான கட்டுப்பாட்டை கடந்த 1ம் தேதி அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்படி ஒற்றப்படை தேதிகளில் ஒற்றைப்படை எண்கள் கொண்ட கார்களும், இரட்டைப்படை தேதிகளில் இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்களும் சாலைகளில் செல்ல வேண்டும். மற்றவர்கள் அரசுப் பேருந்து, மெட்ரோ, கால் டாக்சியில் பயணம் செய்ய வேண்டும்.
கார் கட்டுப்பாட்டால் டெல்லி-குர்காவ்ன் எல்லையில் திங்கட்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் வாகனங்களை நிறுத்தி எண்களை சோதனை செய்வதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது.
இதனால் சிலர் விமான நிலையத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் விமானத்தை தவறவிட்டுள்ளனர். என்ன இது கார் கட்டுப்பாடு, எங்க பார்த்தாலும் ஒரே டிராபிக் நல்லா கட்டுப்பாட கொண்டு வந்தாங்க போங்க என்று மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.