காவிரி தீர்ப்பு: ஒசூர்லயே இறக்கிவிட்டீங்கல்ல, மிச்ச காசையாவது கொடுங்க.. பயணிகள்- நடத்துநர்கள் தகராறு
பெங்களூர்: காவிரி தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானதால், காலை முதல் தமிழக அரசு பஸ்களும், தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களும் கர்நாடகாவிற்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து பெங்களூர் செல்ல வேண்டிய பயணிகளை ஒசூர் எல்லையில் நிறுத்திவிட்டனர். பெங்களூர் வரை டிக்கெட் வசூல் செய்துவிட்டு 40 கிமீக்கு அந்தபக்கமே நிறுத்திவிட்டதால், எஞ்சிய பணத்தை திருப்பி தரும்படி பயணிகள் நடத்துநர்களிடம் தகராறு செய்ததை பார்க்க முடிந்தது.
காவிரி வழக்கில் கர்நாடகாவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியான நிலையிலும், தமிழக பஸ்கள் மதியம் வரை பெங்களூருக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாலையில், அவை அனுமதிக்கப்படலாம் என தெரிகிறது.
பஸ் பயணிகள் மற்றும் பஸ் நடத்துநர்கள் நடுவே ஆங்காங்கு தகராறுகள் நடந்து வந்ததை பார்க்க முடிந்தது. இரு மாநிலங்கள் நடுவே நதிநீர் பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் இதுபோல அடாவடிகள் அரங்கேறுவது வழக்கமாகிவிட்டது.
Commuters face inconvenience at Karnataka-Tamil Nadu border; say, 'transporters are not willing to cross border & are not even returning the money of tickets' #CauveryVerdict pic.twitter.com/e7MD8p5ywA
— ANI (@ANI) February 16, 2018
இன்னும் 15 வருடங்களுக்கு காவிரி தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் கூறியதோடு, 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே இனிமேல் அவ்வப்போது இப்படியான கலாட்டாக்களில் இருந்து மக்கள் தப்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.