கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா கெண்டியை என் முகத்தில் வீசினார், கை விரலை ஒடித்தார்: தோழி புகார்
பெங்களூர்: கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா கெண்டியை தனது முகத்தில் வீசியதாகவும், தனது விரலை ஒடித்ததாகவும் அவரின் தோழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடக்கும் இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா விளையாடக்கூடும். ஆனால் அதற்கு முன்பு அவர் பெங்களூர் போலீஸ் முன்பு ஆஜராகி ஹோட்டல் அறையில் தனது தோழியை தாக்கியது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.
கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி பெங்களூரில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டது. அப்போது பெங்களூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அமித் மிஸ்ரா தனது அறையில் தோழி ஒருவரை அடித்து தாக்கியுள்ளார். இதையடுத்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமித் மிஸ்ராவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர். அந்த பெண் தனது புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது,
அமித் டீ கெண்டியை தூக்கி என் முகத்தில் வீசினார். என்னை அடித்து நொறுக்கினார். மேலும் எனது விரலை ஒடித்தார். சினிமா தயாரிப்பாளரான நானும், அமித்தும் கடந்த 4 ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளோம். அவர் இல்லாத நேரத்தில் அவரின் ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததால் தான் அவருக்கும், எனக்கும் இடையே தகராறு ஏற்பட்டது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.