‘அதெப்படி ரொம்ப நேரம் ஜனகணமண பாடலாம்’... டெல்லி போலீசில் அமிதாப் மீது புகார்
டெல்லி: கொல்கத்தா மைதானத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, தேசிய கீதத்தை தவறாகப் பாடியதாக பாலிவுட் நடிகர் அமிதாப் மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் டி20 உலககோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வென்றது.
முன்னதாக இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருநாட்டு தேசியகீதம் பாடப்பட்டது. அப்போது இந்திய தேசிய கீதத்தை பிரபல பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சன் பாடினார். அதேபோல், பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாகிஸ்தான் பாடகர் ஷபாகத் அமானத் அலியும் பாடினர்.
புகார்...
இந்நிலையில், அமிதாப் தேசிய கீதத்தை தவறாக பாடியதாக டெல்லி அசோக்நகர் போலீஸ் ஸ்டேஷனில் உல்காஸ் என்பவர் புகார் அளித்துள்ளார்.
தவறான வார்த்தைகள்...
ஈடன் கார்டனில் தேசிய கீதத்தைப் பாடியபோது, அமிதாப் வார்த்தைகளை தவறாக பயன்படுத்தியதாகவும், தேசிய கீதத்தை ஒரு நிமிடம் 22 நொடிகள் வரை அதிக நேரம் எடுத்துக் கொண்டு பாடியதாகவும் தனது புகாரில் உல்காஸ் தெரிவித்துள்ளார்.
கபடி போட்டியின் போதும்...
முன்னதாக கபடி லீக் போட்டியின் போதும் அமிதாப் தேசிய கீதத்தை தவறாக பாடியதாக உல்காஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
புகாரின் நோக்கம்...
அதோடு, தேசிய கீதத்தை 52 நொடிகள் மட்டுமே பாட வேண்டும் என்றும், பெரிய நடிகரான அமிதாப் தன்னுடைய தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே தனது புகாருக்கான நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புகார் கடிதம்...
இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் உல்காஸ் புகார் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.