மக்கள் தெருவுக்கு வந்துவிட்டனர்.. காஷ்மீரில் குழப்பம் நிலவுகிறது.. மெகபூபா முப்தி திடுக் டிவிட்!
காஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் குவிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவாக்கப்படுவதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் குவிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவாக்கப்படுவதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு புதிதாக 35000 வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். தற்போது ராணுவ குவிப்பு காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அதேபோல் அமர்நாத் யாத்திரையை தற்போது மத்திய அரசு தடை செய்துள்ளது. ஏற்கனவே அங்கு யாத்திரை சென்று இருக்கும் பக்தர்களையும் வெளியேற அறிவுறுத்தி உள்ளது. மேலும் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக இந்திய உளவுத்துறை சார்பாக இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
காஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் குவிக்கப்பட்டு வருவதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு காஷ்மீர் ஜனநாயக மக்கள் கட்சியை சேர்ந்தவருமான மெகபூபா முப்தி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் செய்துள்ள டிவிட்டில், காஷ்மீரில் கடுமையான குழப்பம் நிலவி வருகிறது. ஏடிஎம், பெட்ரோல் பங்க், அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் என்று பல இடங்களில் மக்கள் குவிந்து வருகிறார்கள். மத்திய அரசு அமர்நாத் யாத்திரை செல்லும் மக்களை பற்றி மட்டும்தான் கவலை படுமா?
மத்திய அரசுக்கு காஷ்மீர் மக்கள் தனித்து விடப்படுவது குறித்து எந்த விதமான கவலையும் கிடையாதா? என்று மிகவும் கோபமாக கேட்டு இருக்கிறார்.
Complete chaos on the streets of Srinagar. People rushing to ATMs, petrol pumps & stocking up on essential supplies. Is GOI only concerned about the safety of yatris while Kashmiris have been left to their own devices?
— Mehbooba Mufti (@MehboobaMufti) August 2, 2019
இந்த நிலையில் காஷ்மீரில் விரைவில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே சமயம் காஷ்மீரில் காஷ்மீரில் பள்ளிகள் மூடப்பட்டதாக ஒருவதந்தி வெளியானது, ஆனால் அதை அரசு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.