5 ஸ்டார் ஹோட்டல்களில் ராஜ்யசபா எம்.பிக்கள் 'சொகுசு': சாடும் சி.ஏ.ஜி அறிக்கை!!
டெல்லி: நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் சார்பாக வெளியூர் செல்லும் போது ராஜ்யசபா எம்.பி.க்கள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்குவதாக கணக்குத் தணிக்கை அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.
2005ஆம் ஆண்டு ராஜ்யசபா விதிகளின்படி நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் இடம்பெறும் எம்.பிக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது பொதுத் துறை நிறுவனங்களின் விருந்தினர் இல்லங்கள், எம்.எல்.ஏக்கள் விடுதிகள், சர்க்யூட் ஹவுஸ் ஆகியவற்றில்தான் தங்க வேண்டும். விருந்தினர் இல்லங்கள் கிடைக்காத நிலையில் அரசு ஹோட்டல்களில் தங்க வேண்டும். இந்த விதியை 2011ஆம் ஆண்டு ராஜ்யசபா செயலகம் உறுதி செய்து சுற்றறிக்கை அனுப்பி வைத்திருந்தது.
ஆனால் 2011 முதல் 2013ஆம் ஆண்டு காலத்தில் நாடாளுமன்ற நிலைக் குழுவில் இடம்பெற்றிருந்த ராஜ்யசபா எம்.பிக்களின் தங்கும் இட செலவு மிக மிக அதிகம் என்கிறது கணக்குத் தணிக்கை அறிக்கை. ராஜ்யசபாவில் மொத்தம் 20 நிலைக்குழுக்கள் உள்ளன.
இந்த குழுக்களைச் சேர்ந்த எம்.பிக்கள் பெங்களூரில் தாஸ் வெஸ்ட் என்ட், சென்னையில் லீ ராயல் மெரிடியன், மும்பையில் தாஜ்மஹால் பேலஸ் ஆகியவற்றில் தங்கியிருந்ததாக கூறுகிறது கணக்கு தணிக்கை அறிக்கை.