இந்தியாவில் கட்டாய வாக்களிப்பு சாத்தியமில்லை... தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி
டெல்லி: கட்டாய வாக்களிப்பு என்பது இந்தியாவில் சாத்தியமில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கூறியுள்ளார்.
வாக்களிப்பது தொடர்பான சர்வதேச விழிப்புணர்வு மாநாடு, டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு நசீம் ஜைதி பேசியதாவது:
ஒவ்வொரு முறை தேர்தல் நடத்தப்படும் போது வானிலை, பள்ளிகளில் நடைபெறும் தேர்தல்கள், பாதுகாப்பு படைகள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில்தான் தேர்தல் தேதிகளை முடிவு செய்து அறிவிக்கிறோம். தேர்தல் எத்தனைக் கட்டங்களாக நடைபெறும் என்பதும் அதன் அடிப்படையில்தான் முடிவு செய்கிறோம்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் பணபலம் அதிக அளவில் இருந்தது கவலைக்குரிய விஷயம். தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அது தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. அதனை எப்படி சமாளிப்பது, கட்டுப்படுத்துவது என்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.
மின்னணு இயந்திரங்களின் தேவை பூர்த்தி செய்யப்படும் போது இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் நடத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள சட்ட அமைச்சகத்திடமும், நாடாளுமன்றக்குழுவிடமும் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைய இருப்பதால் அங்கு தேர்தல்களை நடத்த ஆயத்தமாகி வருகிறோம்.
இந்தியாவைப் பொருத்தவரை கட்டாய வாக்களிப்பு சாத்தியமில்லை. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற யோசனை உலக அளவில் பல நாடுகளில் முன் வைக்கப்பட்டு வருகிறது. என்றாலும் அதனை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று நசீம் ஜைதி கூறினார்.