ம.பி.யில் அமைச்சருக்கு நிகரான பொறுப்பேற்ற உடனேயே.. தனி ஹெலிகாப்டர் கேட்கும் கம்ப்யூட்டர் பாபா
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதா நதியை பார்த்துக்கொள்ளும் நர்மதா நதி அறக்கடளை நிர்வாகி பொறுப்பினை பிரபல சாமியார் கம்ப்யூட்டர் பாபா ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் நதியை சுற்றிபார்க்க அம்மாநில அரசு ஹெலிகாப்டர் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பிரபல சாமியார் நம்தோ தாஸ் தியாகி. அவரை கம்ப்யூட்டர் பாபா என்று அழைத்தால் தான் எல்லோருக்கும் தெரியும்.அந்த அளவுக்கு மகாராஷ்டிராவில் பிரபலமாக உள்ளார்.
சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மத்திய பிரதேசத்தை ஆண்டு வந்த பாஜக அரசு இந்த கம்ப்யூட்டர் பாபா உள்பட 5 பேருக்கு மதம்மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் அமைச்சருக்கு நிகரான பொறுப்பு கொடுத்து இருந்தது. கம்ப்யூட்டர் பாபா சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியிலேயே நர்மதா நதியை பாதுகாக்கும் பொறுப்பினை வகித்து வந்தார். ஆனால் 5 மாதத்தில் சிவராஜ் சிங் சவுகான் அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் காங்கிரஸ் கட்சிக்காக சட்டமன்ற தேர்தலில் வாக்கு சேகரித்தார்.
கம்ப்யூட்டர் பாபா பிரச்சாரம்
கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில் பாஜக வேட்பாளராக சாமியார் பிரக்யா சிங்குக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட திக்விஜய் சிங்குக்காக தீவிரப் பிரச்சாரம் செய்தார். மேலும் கம்ப்யூட்டர் பாபாவுடன் நூற்றுக்கணக்கான சாமியார்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பாஜகவுக்கு போட்டி தரும் வகையில் இவர்களது பிரச்சாரம் செய்தது இருந்தது. ஆனால் திக்விஜய் சிங்கை 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பிரக்யா சிங்கிடம் தோற்றுப்போனார்.
அமைச்சருக்கு நிகரான பதவி
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு க மா நர்மதா, மா க்ஷிப்ரா, மா மண்டாகினி என்ற பெயரில் ஆறுகளை இணைக்கும் நர்மதா அறக்கட்டளை தலைமை நிர்வாகி பொறுப்பில் கம்ப்யூட்டர் பாபாவை கடந்த மார்ச் மாதம் நியமித்தது. இது அமைச்சருக்கு நிகரான பதவி ஆகும்.
நர்மதா நதி பாதுகாப்பு
இந்நிலையில் மாநில மத விவகாரங்கள் மற்றும் ஆன்மீகத் துறை அமைச்சர் பிசி சர்மா மற்றும் முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று நதிகள் ஆணைய அறக்கட்டளை சேர்மன் பொறுப்பினை கம்ப்யூட்டர் பாபா இன்று முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த நதிகள் ஆணைய குழுவில் கம்ப்யூட்டர் பாபாவுக்கு கீழ் 17 பேர் உறுப்பினர்களாக மத்திய பிரதேச அரசு நியமித்துள்ளது.
கம்ப்யூட்டர் பாபா கோரிக்கை
இது தொடர்பாக கம்ப்யூட்டர் பாபா கூறுகையில், "நான் இப்போது நதிகள் ஆணையத்தின் நிர்வாகியாக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளேன். நான் நர்மதா நதியை வானத்தில் இருந்து சுற்றிபார்த்து ஆய்வு செய்தற்காக மத்திய பிரதேச அரசு எனக்கு ஹெலிகாப்டர் வழங்க வேண்டும். இதன் மூலம் நர்மதா நதியை ஒட்டி உள்ள மரங்களின் நிலை குறித்து அறிய முடியும். இதேபோல் முந்தை சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியில், நர்மதா ஆற்றில் மணல் சுரங்கத்தை கண்டுபிடித்ததை போல் இப்போது என்னால் எதேனும் உள்ளனவா என்பதை கண்டுபிடிக்க முடியும்" என்றார்.
மணல் கடத்தலை தடுக்க
நர்மதா, க்ஷிப்ரா, மண்டாகிணி நதிகள் மற்றும் ஆற்றங்கரையோரத்தில நடக்கும் மணல் கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுப்பது தான் கம்ப்யூட்டர்பாபா தலைமையிலான நதிகள் ஆணைய குழுவின் பொறுப்பு ஆகும். ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடந்தால் இதற்காக மா நர்மா என்றபெயரில் இலவச தொலைப்பேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அந்த எண்ணுக்கு அழைத்து தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாம் இந்த குழு. இதற்காக தன்னார்வலர்கள் அடங்கிய இளைஞர்கள் படையும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது