மாவோயிஸ்டுகளிடம் திரவ 'ரசாயன ஆயுதங்கள்' : ஜார்க்கண்ட் போலீஸ் 'வார்னிங்'
ராஞ்சி: மாவோயிஸ்டுகள் திரவ ரசாயன ஆயுதங்கள் மூலம் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக ஜார்க்கண்ட் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிஷா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்குவங்கம், பீகார், அசாம் என பல மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் கை ஓங்கி இருக்கிறது. மத்திய அரசுக்கு எதிராக பழங்குடி இன மக்கள் ஆதரவுடன் தாக்குதல் நடத்தி வருகின்றனர் மாவோயிஸ்டுகள்.
இம்மாநிலங்களின் மலைகளும் வனப்பகுதியும் பழங்குடி மக்களும்தான் மாவோயிஸ்டுகளுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றன. மாவோயிஸ்டுகள் நவீன ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றிருப்பது பலமுறை வெளிச்சத்துக்கு வந்தது.
ரசாயன ஆயுதங்கள்
தற்போது அவர்களிடம் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக ஜார்க்கண்ட் மாநில போலீஸ் செய்தித் தொடர்பாளர் எஸ்.என். பிரதான் கூறியுள்ளார்.
திரவ வடிவ மீத்தேன், நைட்ரோஜென்
இது தொடர்பாக அவர் கூறுகையில் மாவோயிஸ்டுகள் மீத்தேன், நைட்ரோஜென் ஆகியவற்றை திரவ வடிவில் பயன்படுத்தி பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ரசாயன ஆயுதங்களின் திரவ வடிவம் இது.
எப்படி தாக்குதல் நடத்துவார்கள்?
மரங்களில் இதனை தொங்கவிட்டோ அல்லது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடும் படையினர் மீது எறிந்தோ தீ வைத்துவிடுவது என்பதுதான் மாவோயிஸ்டுகளின் திட்டம்.
பொறியியல் பட்டதாரிகள்..
இந்த திரவ ரசாயன ஆயுதத்தை தயாரிக்கவும் எப்படி செயல்படுத்துவது என்பதை கற்றுத்தரவும் பொறியியல் படித்த பட்டதாரிகளை மாவோயிஸ்டுகள் அமர்த்தியுள்ள்ளனர்.
வார்னிங்
இதனால் அனைத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
18 மாவட்டங்கள்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மொத்தம் உள்ள 24 மாவட்டங்களில் 18 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் செல்வாக்கு உள்ளவை என்பதால் இந்த திரவ ரசாயன ஆயுத தகவல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த உடலில் வெடிகுண்டு
ஏற்கெனவே தங்களது தாக்குதலில் இறந்த பாதுகாப்புப் படையினரின் உடலுக்குள் வெடிகுண்டுகளை மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திரவ ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தப் போகிறார்கள் என்ற தகவல் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களையும் உஷார்படுத்தியிருக்கிறது.