4 வாரத்தில் மறுதேர்வு சாத்தியமில்லை.. சிபிஎஸ்இ மனு.. நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
டெல்லி: மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்தினைத் தொடர்ந்து மறுதேர்வு நடத்த கூடுதல் கால அவகாசம் வழங்க அனுமதி கோரிய மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்று நாளை விசாரணை நடத்தவுள்ளது.
மத்திய பள்ளி கல்வி வாரியம் இந்த ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வை கடந்த மாதம் 3 ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 6 லட்சத்து 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
கடந்த 5 ஆம் தேதி இதன் முடிவு வெளியாக இருந்தது. இதற்கிடையே ஹரியானா மாநிலத்தில் தேர்வு தொடங்கும் முன்பாகவே 44 மாணவர்கள் கேள்வித் தாள்களை முறைகேடாக பெற்று தேர்வை எழுதியதாக சில மாணவர்கள் மற்றும் பெற்றோர் சார்பில் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக ஹரியானா போலீசார் விசாரணை நடத்தி 12 பேரை கைது செய்தனர்.
நுழைவுத் தேர்வில் ஹரியானா, பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 700க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் முறைகேடு மூலம் சட்டவிரோதமாக பலன் அடைந்து இருப்பார்கள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் போலியான முகவரி மூலம் 72 செல்போன் இணைப்புகளை பெற்று, 102 கேள்விகளுக்கான பதில்கள் அந்த மாணவ,மாணவிகளுக்கு அனுப்பப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையே முறைகேடு நடைபெற்றதால் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்வு நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரி தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
முறைகேடு நடைபெற்றதை தொடர்ந்து அகில இந்திய அளவில் 6.5 லட்சம் பேர் எழுதிய மருத்துவ நுழைவுத்தேர்வை நேற்று அதிரடியாக ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், 4 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்துமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் மறுதேர்வு தேர்வு நடத்த கூடுதல் காலஅவகாசம் வழங்ககோரி மத்திய பள்ளி கல்வி வாரியம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் சிபிஎஸ்இயின் மனுவானது நாளை விசாரணைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.