பீகாரில் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்: பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ்
பாட்னா: பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபை தேர்தல் 5 கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
மக்கள் முன்னேற்றத்திற்காக வாக்களித்துள்ளதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இது பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில்,
தாத்ரி கொலை பற்றி பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் பேசவில்லை. தாத்ரி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அதை பீகாரோடு என் தொடர்புபடுத்தி பேச வேண்டும். தாத்ரி பிரச்சனை பற்றி பேசி வாக்கு பெற லாலு பிரசாத் யாதவ் முயற்சித்தார் என்றார்.
பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் கூறுகையில்,
பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதையே தற்போதைய நிலவரம் தெரிவிக்கிறது. இருப்பினும் தற்போதே எதையும் கூறிவிட முடியாது. ஆனாலும் பீகாரில் நாங்கள் ஆட்சி அமைப்போம்.
முன்னேற்றம் வேண்டி பீகார் மக்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். கொள்கைகளை விட முன்னேற்றம் தான் வேண்டும் என்பதை புரிந்து கொண்டு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்றார்.