உத்தரகாண்ட் காங். ஆட்சியை கவிழ்க்க முயற்சி- மாஜி முதல்வர் மகன் சாகேத் பகுகுணா அதிரடி டிஸ்மிஸ்
டேராடூன்: உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி ஆட்சியைக் கவிழ்க்க முயற்சித்த முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணாவின் மகன் சாகேத் பகுகுணா கட்சியில் இருந்து அதிரடியாக 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரீஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் 36, பாஜக 28, பகுஜன் சமாஜ் கட்சி 2, சுயேட்சைகள் 3, உத்தரகாண்ட் கிராந்திதளம் 1 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ஹரீஷ் ராவத்துக்கு எதிராக 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தியாளர்களாக மாறினர். உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணா மகன் சாகேத் பகுகுணா தலைமையில் அதிருப்தி கோஷ்டி உருவானது.
இவர்கள் 9 பேரும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விட்டு பாஜக ஆட்சியை கொண்டு வரவும் தயாராகினர். மாநில சட்டசபையில் அண்மையில் நிதி மசோதா மீதான வாக்கெடுப்பின் போது, அரசுக்கு எதிராக 9 காங். எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதனால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகக் கூறி 28 எம்எல்ஏக்களைக் கொண்ட பாஜக, அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேருடன் சேர்த்து ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் மனு அளித்தது. ஆனால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் பதவி விலகத் தயார் என்றும் முதல்வர் ஹரீஷ் ராவத் தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில் வரும் 28-ந் தேதிக்குள் சட்டசபையில் ஹரீஷ் ராவத் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கிருஷ்ணகாந்த்பால் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் ஜனாதிபதியை சந்திக்க டெல்லிக்கு காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு சென்றார் சாகேத் பகுகுணா.
இந்நிலையில்தான் சாகேத் பகுகுணா, கட்சி இணை செயலாளர் அனில் குப்தா ஆகியோரை காங்கிரஸ் கட்சி 6 ஆண்டுகாலத்துக்கு டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேரையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் அடிப்படையில் சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே அஸ்ஸாம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை வளைத்து அக்கட்சியை உடைத்தது பாஜக. இதேபோல் அருணாசலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சியின் போது எம்எல்ஏக்களை வளைத்து அந்த அரசு கவிழ்க்கப்பட்டது. தற்போது அங்கு பாஜக ஆதரவு அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை போனது.
இதேபாணியில் தற்போது உத்தரகாண்ட் காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.