ரயில்வே பட்ஜெட் ஊடகங்களில் 'லீக்' ஆனதா? கவுடாவுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை
டெல்லி: ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முன்பாக வெளியில் கசிந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடாவுக்கு எதிராக உரிமைமீறல் பிரச்சினையை ராஜ்யசபாவில் கொண்டுவந்துள்ளது காங்கிரஸ்.
ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று, அத்துறை அமைச்சர் சதானந்தகவுடாவால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து ஏற்கனவே தகவல் வெளியே கசிந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வாறு தகவல் கசிந்தால், அது நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாண்புக்கு எதிரானதாகும்.
ரயில்வே பட்ஜெட் அம்சங்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டதாக குற்றம்சாட்டி ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். அவர்களது கைகளில் பட்ஜெட்டுக்கு முந்தைய நாள், பட்ஜெட் அம்சங்கள் குறித்து வெளியான செய்தித்தாள்களில் வெளியான செய்திகளின் துண்டு காகிதங்கள் இருந்தன.
மேலும், சதானந்தகவுடாவுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவர அனுமதி கோரி ராஜ்யசபா தலைவரிடமும் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கை மீது பரிசீலனை செய்து முடிவை அறிவிப்பதாக ராஜ்யசபா தலைவர் தெரிவித்தார்.
கர்நாடக முன்னாள் முதல்வரான சதானந்தகவுடா, மத்திய ரயில்வே அமைச்சராக தாக்கல் செய்த முதல் பட்ஜெட் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.