ம.பி.யில் சர்ச்சை.. 12 காங். எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வந்ததாக போர்ஜரி கையெழுத்து: பாஜக திடுக்
போபால்: மத்திய பிரதேச அரசியலில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. சட்டசபைக்கு வராத 12 எம்.எல்.ஏக்களின் கையெழுத்து போர்ஜரியாக போடப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா திடுக்கிடும் புகாரைத் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் அரசை கவிழ்த்ததைப் போல மத்திய பிரதேச கமல்நாத் அரசை கவிழ்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் பக்கம் தாவியதால் களநிலவரம் தலைகீழானது.
மேலும் 4 பாஜக எம்.எல்.ஏக்கள் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக காங்கிரஸ் ஆதரவு கம்ப்யூட்டர் பாபா சாமியார் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று பாஜக புதிய குண்டை வீசியிருக்கிறது.
போபாலில் எதிர்க்கட்சித் தலைவரான கோபால் பார்கவா கூறியதாவது:
சட்டசபையில் புதன்கிழமையன்று கிரிமினல் சட்ட திருத்த மசோதா தாக்கல், செய்யப்பட்ட போது 8 முதல் 12 எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வரவில்லை என தெரியவந்துள்ளது. அவர்கள் போட்டிருப்பதாக கூறப்படும் கையெழுத்துகள் போர்ஜரியானது.
தற்போது ஆளுநருக்கான அதிகாரங்கள் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். ஆகையால் எம்.எல்.ஏக்களின் கையெழுத்து உண்மையானதுதானா? என்பது குறித்து ஆளுநர் ஆராய வேண்டும். 12 எம்.எல்.ஏக்கள் வரை சட்டசபைக்கே வராத போது அரசுக்கு எப்படி 122 வாக்குகள் கிடைத்திருக்கும்?
இவ்வாறு கோபால் பார்கவா கூறினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சஞ்சய் யாதவ், புதன்கிழமை பாஜகவின் 50 எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கே வரவில்லை. புதன்கிழமையன்றே சட்டசபையில் இதை கோபால் பார்கவா கூறியிருக்கலாமே... பாஜகவின் வேலையே பொய் சொல்வது என்பதுதான் என்றார்.
230 எம்.எல்.ஏக்களை கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் காங்கிரஸுக்கு 114 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவை 116 எம்.எல்.ஏக்கள். இதனால் 4 சுயேட்சை எம்.எல்.ஏக்கள், 2 பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள், 1 சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ, கமல்நாத் அரசுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.