ஜெ. விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்ய காங். மேலிடம் நெருக்கடியா?: கர்நாடகா சட்ட அமைச்சர் மறுப்பு
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் கட்சி மேலிடம் நெருக்கடி கொடுக்கவில்லை என்று கர்நாடகா மாநில சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் 11-ந் தேதி விடுதலை செய்தது. இந்த விடுதலையை எதிர்த்து 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் கணக்கீட்டுப் பிழைகள் இருப்பதால் உறுதியாக மேல்முறையீடு செய்தாக வேண்டும் என்று கர்நாடகா அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவிக்குமார் வர்மா ஆகியோர் மாநில அரசுக்கு பரிந்துரைத்திருந்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் உடனே முடிவெடுக்காமல் கர்நாடகா அரசு தயக்கம் காட்டி வந்தது.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலேயே ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் கடும் எதிர்ப்பும் கிளம்பியிருந்தது. இதனிடையே மேல்முறையீடு செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மூலமாக கர்நாடகா அரசுக்கு தி.மு.க. தரப்பு நெருக்கடி கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் கர்நாடகா அரசு நேற்று ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா கூறியதாவது:
அப்பீலுக்குத் தகுதியானது
சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் அரசுக்கு பரிந்துரை செய்தனர். மேலும், இந்த தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை வழங்குமாறு சட்டத்துறைக்கு உத்தரவிட்டு இருந்தோம். சட்டத்துறை அதிகாரிகள் தீர்ப்பு விவரங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை வழங்கி, மேல்முறையீடு செய்ய இது தகுதியான வழக்கு என்று பரிந்துரை செய்தனர்.
அமைச்சரவைக் கூட்டத்தில்..
அரசு தலைமை வழக்கறிஞர், அரசு சிறப்பு வழக்கறிஞர், சட்டத்துறை அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகளை அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து நான் விளக்கி கூறினேன். அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து இதன் சாதக-பாதகங்களை எடுத்து வைத்தேன். இந்த வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியபோது அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமனம் செய்யும் அதிகாரம் மற்றும் வழக்கை நடத்தும் அதிகாரம் கர்நாடகத்துக்கு தான் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியது. உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான அறிக்கையை தாக்கல் செய்தோம்.
அரசு நிர்வாகத்தை சிறப்பாக நடத்துவதில் கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றத்தில் நற்பெயர் உள்ளது. மேலும் இது மேல்முறையீடு செய்வதற்கு தகுதியான வழக்கு. எனவே சட்டத்துக்கு உட்பட்டு, கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுமாறு முதல்வர் எனக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.
பழிவாங்கல் எதுவும் இல்லை
இதில் பழிவாங்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இந்த வழக்குக்கும், எங்களுக்கும் சம்பந்தமே இல்லை. இந்த வழக்கு குறித்து புகார் கொடுத்தவர் சுப்பிரமணியசாமி. வழக்கு விசாரணை கர்நாடகத்தில் நடைபெற்றதால் வழக்கை நடத்தும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு கிடைத்து உள்ளது. வழக்கை சட்டப்படி நடத்த வேண்டிய கடமை கர்நாடக அரசுக்கு உள்ளது. மேல்முறையீடு செய்வதற்கான முடிவை எடுப்பதில் தாமதம் செய்யவில்லை. அவ்வாறு தாமதித்ததாக கூறுவது தவறானது.
பி.வி.ஆச்சார்யா ஆஜராவார்
மேல்முறையீடு செய்யும் முன்பு அனைத்து அம்சங்களையும் ஆராய வேண்டியது அவசியம். மேலும் மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் காலஅவகாசம் உள்ளது. அதனால் இது தாமதமான முடிவு என்று கூற முடியாது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆஜராகி வாதிடுவார். அவருக்கு உதவியாக வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா செயல்படுவார்.
காங்கிரஸ் மேலிடம் தலையீடு இல்லை
இந்த விஷயத்தில் காங்கிரஸ் மேலிடம் தலையிடவில்லை. கட்சி மேலிடத்துடன் மாநில அரசு கலந்து ஆலோசிக்கும் என்று அபிஷேக் சிங்வி கூறியது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அரசியல் ரீதியாக எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் வரவில்லை. இது முழுக்க முழுக்க நாங்கள் ஆலோசித்து எடுத்த முடிவு ஆகும்.
மேகதாதுவுக்கு தொடர்பா?
மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சினைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனுடன் இதை தொடர்புபடுத்துவது சரியல்ல.
இவ்வாறு கர்நாடகா அமைச்சர் ஜெயச்சந்திரா கூறினார்.