மகராஷ்டிரா: சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்- இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி?
மும்பை: மகாராஷ்டிரா தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்த போதும் புதிய முயற்சியாக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும், பாஜக - சிவசேனைக் கூட்டணியும் முறிந்ததால் நான்கு கட்சிகளும் தனித்தனியே களம்கண்டன. மொத்தம் 288 சட்டசபைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 123 இடங்களைக் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தரும் என்று அக்கட்சித் தலைவர் சரத்பவார் கூறியிருந்தார்.
ஆர்.எஸ்.எஸ். நெருக்கடி
ஆனால் பாஜகவும் சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நெருக்கடி கொடுத்து வருகிறது.
புதிய கூட்டணி அரசு?
இந்த நிலையில் புதிய பரபரப்பாக காங்கிரஸ்- சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் பவார் தகவல்
தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் துணை தலைவர் அஜித் பதவார் இதுபற்றி கூறுகையில், காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதிய யோசனையை தெரிவித்தார். சிவசேனாவை சேர்ந்து கொண்டு நாம் ஆட்சி அமைக்கலாம் என்று கூறினார். மூன்று கட்சிகளும் கூட்டு சேர்ந்தால் ஆட்சியமைக்க போதிய பலம் கிடைத்து விடுகிறது. ஆனால் இந்த திட்டத்தின்படி நிலையான ஆட்சியை கொடுக்க முடியாது என்று அவரிடம் நான் தெரிவித்து விட்டேன் என்றார்.
சாத்தியமா?
சிவசேனா 63, காங்கிரஸ் 42, தேசியவாத காங்கிரஸ் 41 ஆகிய இடங்களில் வெற்றி பெற்று உள்ளன. இந்த மூன்று கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை ஆட்சியமைக்க போதுமான அளவுக்கு 146 உள்ளது. 288 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தாலே ஆட்சி அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.