நாகா அமைதி ஒப்பந்தம்- வடகிழக்கு மாநிலங்களை மறுசீரமைத்தால் காங். எதிர்க்கும்: ஜெய்ராம் ரமேஷ்
இம்பால்: மத்திய அரசு நடைமுறைப்படுத்த இருக்கும் நாகா அமைதி ஒப்பந்தத்தில் மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக நீடித்து வரும் நாகாலாந்து பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நாகா ஆயுத குழுக்களுடனான அமைதி ஒப்பந்தம் ஓரிரு நாட்களில் கையெழுத்திடப்பட்டு நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.
இதனால் நாகா இனமக்கள் வசிக்கும் மணிப்பூர், நாகாலாந்து, அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனிடையே நாகா அமைதி ஒப்பந்தம், அதனால் வடகிழக்கு மாநிலங்களில் உருவாகும் சூழல் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான ஒரு குழுவை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அனுப்பி வைத்துள்ளார்.
அக்குழுவில் தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூர், முகுல் வாஸ்னிக், ஜிதேந்திர சிங், ரஞ்சித் முகர்ஜி, முகமது அலிகான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் வடகிழக்கு மாநில கள நிலவரத்தை ஆய்வு செய்து வருகிறது. இதனிடையே மணிப்பூர் தலைநகர் இம்பாலில் செய்தியாளர்களிடம் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
மணிப்பூர்: இம்பாலை அதிரவைத்த குண்டுவெடிப்பு- 5 போலீசார் உட்பட 6 பேர் படுகாயம்
மத்திய அரசுக்கும் நாகா குழுக்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை வெளிப்படையாக நடைபெறவில்லை. இது தொடர்பாக மத்திய அரசு எதனையும் பகிரங்கப்படுத்தவில்லை.
எந்த ஒரு அமைதி ஒப்பந்தமும் மணிப்பூர் உள்ளிட்ட எந்த ஒரு மாநிலங்களின் புவியியல் அமைப்பையும் மாற்றி அமைக்கக் கூடாது. அதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும்.
ராஜீவ்காந்தி காலத்தில் அஸ்ஸாம், மிசோரம் மற்றும் திரிபுரா மாநிலங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. அதில் எந்த ஒரு மாநிலத்தின் புவியியல் அமைப்பையும் மாற்றி அமைக்கவில்லை. 2015-ம் ஆண்டு மத்திய அரசு நாகா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது அதன் விவரங்கள் அஸ்ஸாம், மணிப்பூர், அருணாச்சலபிரதேச மாநில முதல்வர்களுக்கு கூட தெரியப்படுத்தவில்லை. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.