பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து சமூகத்துக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு: காங்.
டெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய "அனைத்து" சமுதாயத்தினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டார். நாட்டின் பொருளாதாரம், வெளியுறவு உள்ளிட்ட 20 தலைப்புகளில் 50 பக்கங்களை உள்ளடக்கிய இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்:
பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து சமுதாயத்தினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வழிவகை ஆராயப்படும். அதே நேரத்தில் இது நடைமுறையில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும்.
- ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை இலங்கை அரசு செயல்படுத்த வலியுறுத்துவோம்
- இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கான மறுசீரமைப்பு திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்வோம்
- இலங்கை ராணுவ மனித உரிமை மீறல்கள் குறித்து நேர்மையான, கால வரைமுறைக்குட்பட்ட விசாரணை நடத்த அழுத்தம் கொடுப்போம்.
- நாடு முழுவதும் 10 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- தேசிய விளையாட்டு கல்விக்கான பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.
- அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.
- இடஒதுக்கீட்டால் பயனடையாத பிரிவினரை அடையாளம் காண ஆணையம் அமைப்போம்.
- மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவோம்
- நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.
- முதியோர், மாற்றுத்திறனாளிக்கு நிரந்தர ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- காவல்நிலையங்களில் 25% பெண்கள் பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்வோம்.
- மீனவர் நலனுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்.
- நிலம் குறித்த ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- ஊழலை ஒழிக்க மேலும் 3 புதிய சட்டங்கள் அறிமுகம் செய்வோம்.
- ஒருபால் உறவு கொள்வது சட்டப்பூர்வமாக குற்றமல்ல என்று அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- அனைவருக்கும் குறைந்த செலவில் மருத்துவ வசதி சேவை ஏற்படுத்துதல்.
- ஏழைகளுக்குத் தரமான வசிப்பிட உரிமையை ஏற்படுத்தி தருதல்.
இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.