தெலுங்கானா காங். மேலிட பொறுப்பாளர் பதவியில் இருந்து திக்விஜய்சிங் தூக்கியடிப்பு- சோனியா அதிரடி!
தெலுங்கானா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பதவியில் இருந்து திக்விஜய்சிங்கை தூக்கியடித்தது கட்சி தலைமை.
டெல்லி: தெலுங்கானா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பதவியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் ஆர்.சி. குந்தியா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒன்றுபட்ட ஆந்திரா மாநிலத்தின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக 2013-ம் ஆண்டு திக்விஜய்சிங் நியமிக்கப்பட்டார். ஆந்திரா, தெலுங்கானா மாநில பிரிவினைக்குப் பின் தெலுங்கானா மேலிட பொறுப்பாளராக தொடர்ந்தார் திக்விஜய்சிங்.
இந்த நிலையில் இன்று திடீரென திக்விஜய்சிங் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஆர்.சி. குந்தியாவை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. தெலுங்குதேசம் கட்சியின் ரேவந்த் ரெட்டியை தெலுங்கானா காங்கிரஸ் தலைவராக்க திக்விஜய்சிங் முயற்சித்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அவர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் செப்டம்பர் மாதம் முதல் ஆன்மீக பாதயாத்திரையை திக்விஜய்சிங் நடத்த இருப்பதாலேயே அவர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.