எதிர்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸுக்கு அளிப்பதில் சட்ட சிக்கல் இல்லை: வீரப்ப மொய்லி
டெல்லி: எதிர்கட்சி தலைவர் பதவி காங்கிரஸுக்கு கிடைக்க எந்தவித சட்ட சிக்கலும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. குறைந்தது 55 இடங்களில் வெற்றி பெறாததால் காங்கிரஸுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்காத சூழல் உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான வீரப்ப மொய்லி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மக்களையில் எதிர்கட்சிகளாக இருப்பவர்களில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு தான் எதிர்கட்சி தலைவர் பதவியை அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற சட்டம் உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மக்களவை தலைவர்களாக இருந்தவர்கள் மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு இருக்கும் கட்சிக்கு எதிர்கட்சி தலைவர் பதவி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இது மக்களவை தலைவர்கள் பிறப்பித்த உத்தரவே அன்றி நாடாளுமன்ற சட்டம் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு இந்த உத்தரவு தான் காரணம். எதிர்கட்சி தலைவர் பதவியை பெற ஒரு கட்சி குறைந்தபட்சம் இத்தனை உறுப்பினர்களை பெற்றிருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விதி இல்லை. அதனால் எதிர்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸுக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு அந்த பதவியை அளிக்க எந்தவித சட்ட சிக்கலும் இல்லை என்றார்.