ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளதாக பொய்யுரைக்கிறார் சுப்ரமணிய சுவாமி - காங்கிரஸ்
டெல்லி: காங்கிரஸ் துணைத்தலைவரான ராகுல்காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றிருப்பதாக சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி பிரிட்டனை சேர்ந்த பேகோப்ஸ் லிமிட்டெட் என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராக ராகுல் காந்தி பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு ஆண்டறிக்கையில் ராகுல் காந்தி தன்னை ஒரு பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர் எனக் குறிப்பிட்டு, பிரிட்டன் பகுதியில் உள்ள ஒரு முகவரியை தெரிவித்துள்ளதாகவும் கூறி அது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த அக்கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, "ராகுல்காந்தி இந்தியாவைத் தவிர வேறு எந்த ஒரு நாட்டின் குடியுரிமையையும் பெற்றிருக்கவில்லை.
ஆட்சி, அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பாஜக இதுபோன்ற ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பது கண்டனத்துக்குரியது. சுப்பிரமணியம் சுவாமி போன்றவர்கள் மூலம், மலிவான தந்திரங்கள் மிக்க அரசியலை பாஜக நடத்தி வருகின்றது.
கொள்கையளவில் தோற்றுப்போன தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே இது போன்ற நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றது" என்று தெரிவித்துள்ளார்.