மணிப்பூரில் பெரும்பான்மையை பறிகொடுத்த பாஜக - ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்
இம்பால்: மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு பெரும்பான்மையை பறிகொடுத்த நிலையில் புதிய ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரியுள்ளது.
60 எம்.எல்.ஏக்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கான தேர்தல் 2017-ல் நடைபெற்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக 28 இடங்களில் வென்றது.
பாரதிய ஜனதா கட்சி 21 இடங்களிலும் மாநில கட்சிகள், சுயேட்சைகள் எஞ்சிய இடங்களிலும் வென்றனர். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அழைக்கப்படவில்லை.
மணிப்பூரில் பெரும்பான்மையை இழந்தது பாஜக அரசு- ஆதரவை விலக்கியது என்.பி.பி.- ஆட்சி அமைக்கிறது காங்.
திடீர் ஆட்சி அமைத்த பாஜக
மாநில கட்சிகளின் ஆதரவுடன் திடீரென பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியை அமைத்தது. பாஜகவின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுத்தது. ஆனாலும் முதல்வர் பைரோன்சிங் தலைமையில் பாஜக அரியணை ஏறியது.
பாஜகவின் வளைப்பு காட்சிகள்
இந்நிலையில் மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக வழக்கம் போல வளைத்துக் கொண்டது. இப்படி கட்சி மாறிய எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரியது காங்கிரஸ். ஆனால் மணிப்பூர் சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்து வந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியது காங்கிரஸ்.
நீதிமன்றங்களில் செம தீர்ப்புகள்
இது தொடர்பான வழக்குகளை விசாரித்த மணிப்பூர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம், தகுதி நீக்கம் செய்யக் கோருகிற எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கும் வரை அவர்கள் சட்டசபைக்குள் நுழையவே கூடாது என தடை விதித்தன. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் இதேபோன்ற ஒரு நடவடிக்கை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மையை பறிகொடுத்த பாஜக
இதனிடையே மணிப்பூரில் புதிய திருப்பமாக, பாஜக அரசுக்கான ஆதரவை என்.பி.பி. என்கிற மாநில கட்சி விலக்கிக் கொண்டது. அக்கட்சியின் 3 அமைச்சர்கள், பைரோன் சிங் அமைச்சரவையில் இருந்தும் ராஜினாமா செய்தனர். அத்துடன் பைரோன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கான ஆதரவை சுயேட்சைகளும் சிறு கட்சி எம்.எல்.ஏக்களும் விலக்கிக் கொண்டனர். உச்சகட்டமாக பாஜகவின் 3 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் பக்கம் தாவினர். இதனால் மணிப்பூரில் பாஜக அரசு பெரும்பான்மையை பறிகொடுத்தது.
காங். ஆட்சி அமைக்க உரிமை கோரியது
பாஜக அரசை நேற்று வரை ஆதரித்த அத்தனை கட்சிகளும் இன்று காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தந்துள்ளன. இதனைத் தொடர்ந்து மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவை இன்று முன்னாள் முதல்வர் இபோபி சிங் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்தனர். அப்போது மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க இபோபிசிங் உரிமை கோரினார். தற்போதைய சூழ்நிலையில் மணிப்பூர் பாஜக அரசு எந்த நிமிடத்திலும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்க அழைக்கப்படலாம் என்கிற நிலைமையே உள்ளது.