தேசப்பற்று உள்ளவர்கள் யாகூப் மேமனுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள்: சதானந்தகவுடா தாக்கு
சென்னை: தேசபற்று உள்ளவர்கள் யாகூப் மேமன் தூக்கிற்காக வருந்தமாட்டார்கள் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சதானந்தகவுடா, "மும்பை குண்டுவெடிப்பில் இறந்த அப்பாவிகளுக்காக கவலைப்படாத சிலர், கொலையாளி யாகூப் மேமனுக்காக ஆதரவு காட்டுகின்றனர். தேசப்பற்று உள்ளோர் யாரும், அவருக்கு ஆதரவு தெரிவிக்க கூடாது" என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், காங்கிரஸ் கட்சி, அநாவசியமாக நாடாளுமன்றத்தை முடக்கி வைத்துள்ளதாக குற்றம்சாட்டிய கவுடா, எந்த ஒரு விவகாரமும் கிடைக்காததால் வியாபம், லலித்மோடி பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கிளப்பி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதில்லை.
மத்திய பிரதேச முதல்வர், ராஜஸ்தான் முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் மீது எந்த தப்பும் இல்லை என்று பாஜக ஏற்கனவே தனது தரப்பு நியாயத்தை தெரிவித்துவிட்டது. இந்தியர் ஒருவர் புற்றுநோய் பாதித்த மனைவிக்கு சிகிச்சையளிக்க உதவி கேட்டதால், சுஷ்மா செய்துகொடுத்தார். அவ்வளவுதான் என்று சதானந்தகவுடா தெரிவித்தார்.
கவுடாவின் சொந்த மாநிலமான கர்நாடக நிலவரம் குறித்து கேட்டதற்கு, அங்கு முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் நடுவே பிளவு நிலவுகிறது. விவசாயிகள் தினமும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கர்நாடக அரசு நிர்வாகரீதியாக முழுமையாக தோல்வியடைந்துவிட்டது என்று தெரிவித்தார்.