தேர்தல் தோல்வி... ராகுலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் வெடித்தது கலகக் குரல்கள்!!
டெல்லி: லோக்சபா தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ள காங்கிரஸில் துணைத் தலைவர் ராகுலுக்கு எதிராக கலகக் குரல்கள் வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி என்.ஜி.ஓ. அமைப்பை போல செயல்படுகிறது; மக்களுடன் தொடர்பு இல்லாத கட்சியாகிவிட்டது என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஏற்கெனவே தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று சோனியாவும் ராகுலும் தங்களது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்ய முன்வந்தனர். ஆனால் காங்கிரஸ் காரியக் கமிட்டி இந்த நாடகத்தை ஏற்கவில்லை.
என்.ஜி.ஓவான காங்கிரஸ்
தற்போது மெது மெதுவாக அக்கட்சியில் கலகக் குரல்கள் வெடித்துள்ளது. தேர்தல் தோல்வி தொடர்பாக மிலிந்த் தியோரா கூறியதாவது:
ராகுல் தான் தேர்தல் பிரசாரத்தை தலைமை ஏற்று நடத்தினார். அதற்காக அவரை மட்டும் பொறுப்பாளி ஆக்க முடியாது. கள நிலவரத்தை அவருக்கு கொண்டு சென்றவர்கள் நிறைய பேர். அவர்கள், தேர்தல் மற்றும் அரசியலுக்கு அனுபவம் இல்லாதவர்கள்; மக்களிடம் செல்வாக்கு இல்லாத தலைவர்கள். தேர்தல் நேரத்து அரசியல் நெளிவு சுளிவுகள் அறியாத இந்த தலைவர்களின் ஆலோசனைகளால் தான் தோல்வி ஏற்பட்டது.
இது போன்ற நபர்கள் தான், கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர்; அவர்கள் தான் முடிவுகளை எடுக்கின்றனர். அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்; காங்கிரஸ், அரசியல் கட்சியைப் போல் செயல்பட வேண்டும்; என்.ஜி.ஓ., அமைப்பு போல் செயல்படுகிறது என்றார்.
இதனிடையே மும்பை எம்.பி.யாக இருந்த பிரியா தத் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சிக்கும், மக்களுக்கும் இடையே தொடர்பே இல்லாத நிலை ஏற்பட்டதால் தான் தோல்வி ஏற்பட்டதாக அவர் சோனியாவிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று காங்கிரஸ் முதல்வர்களான, அஸ்ஸாமின் தருண் கோகோய், ஹிமாச்சல பிரதேசத்தின் வீரபத்ர சிங் சந்தித்தனர். இந்த இரண்டு மாநிலங்களிலும், காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால், இருவரும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரது ராஜினாமாவை சோனியாவை ஏற்கவில்லை.
கேரளாவில் அக்கப்போர்
இதனிடையே காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, லோக்சபா தேர்தல் தோல்விக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தான் காரணம் என கூறி உள்ளது.
ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கருத்துக்கு கேரள மாநில காங்கிரஸ் ஆதரவு வீக் ஷனம் பத்திரிகை மிகக் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.