பாக். விசாரணை குழுவிற்கு எதிர்ப்பு.. பதன்கோட் விமானதளம் எதிரே காங்., ஆம் ஆத்மி போராட்டம்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானதளத்தில் பாகிஸ்தான் குழு விசாரணை நடத்த வந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பதன்கோட் விமான தளத்தில் கடந்த ஜனவரி மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு காரணம், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என்று இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.
எனவே, இந்த விவகாரத்தை விசாரிக்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது. தனது விசாரணை குழுவை அனுப்பி விசாரிக்க பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இதற்கு மத்திய அரசு சம்மதித்தது.
இதையடுத்து, பதன்கோட்டுக்கு இன்று பாகிஸ்தான் கூட்டு விசாரணை குழு வந்துள்ளது.
பஞ்சாப் தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் முகமது தாகிர் தலைமையிலான இக்குழுவில் லாகூர் புலனாய்வு பிரிவு துணை இயக்குநர் முமகது ஆசிம் அர்ஷத், ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் லெப்டினன்ட் கர்னல் தன்வீர் அகமது, ராணுவ புலனாய்வு பிரிவு லெப்டினன்ட் கர்னல் இர்பான் மிர்சா, குஜ்ரன்வாலா விசாரணை அதிகாரி ஷாகித் தன்வீர் ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவிற்குள் வந்து பாகிஸ்தான் குழு ஆய்வு செய்வதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இக்குழுவிற்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பதன்கோட் தளத்திற்கு வெளியே ஆம் ஆத்மி, காங்கிரசார் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை அங்கிருந்து அகற்றி கூட்டிச் சென்றனர்.