சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டார் மம்தா.. மே.வங்கத்தில் பாஜக வளர்ச்சி பற்றி காங். தாக்கு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜகவின் அசுர வளர்ச்சியால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடும் அதிர்ச்சியில் உள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மம்தாவை கடுமையாக விமர்சித்துள்ளது. ஒரு காலத்தில் காங்கிரசை பலவீனப்படுத்துவதற்காக பாஜகவை வலுப்படுத்தியவர்கள், இன்று தனது சொந்த கட்சியின் தலைவர்களை பாதுகாக்கவே போராடுகிறார்கள் என கூறியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக 18 இடங்களை கைப்பற்றி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 23 இடங்களில் தான் வென்றுள்ளது இடதுசாரிகள் மேற்குவங்கத்தில் மிக மோசமாக தோற்றுள்ளனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானார்ஜி பாஜகவின் இந்த எழுச்சியால் கடும் அதிர்ச்சியில் உள்ளார்.
இப்படியே போனால் இன்னும் இரண்டு வருடத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்துவிடுமே என்ற அச்சத்தில் மம்தா பானர்ஜி இருக்கிறார். இதனால் தேர்தல் வியூக கில்லாடியான பிரசாந்த் கிஷோரை தனக்காக வேலை செய்ய அழைத்துள்ளார். அவரும் மம்தாவுக்காக அடுத்த மாதம் முதல் வேலை செய்யப்போகிறார்.
இதற்கிடையில் மேற்கு வங்கத்தின் வளர்ச்சியால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைப் போல் காங்கிரஸ் கட்சியும் கடும் அதிர்ச்சியில் உள்ளது. பாஜகவின் எழுச்சிக்கு மம்தாவின் தவறான செயல்களே காரணம் என குற்றம்சாட்டி உள்ளது காங்கிரஸ் கட்சி.
இது தொடர்பாக மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா கூறுகையில், "மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் எழுச்சிக்கு மம்தா பானர்ஜி மட்டுமே காரணம். அவர் அப்பட்டமான சிறுபான்மை பிரசாரத்தை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், பாஜக மேற்கு வங்காளத்தில் காலூன்றி இருக்காது.
எதிர்க்கட்சிகளை அகற்றுதல் மற்றும் அந்த கட்சிகளின் தலைவர்களை வேட்டையாடுதல் என்ற மம்தாவின் கொள்கைகளால்தான் பாஜக எழுச்சி பெற்றுள்ளது இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டுவதற்கு மம்தாவுக்கு அதிகாரம் இல்லை. ஒரு காலத்தில் காங்கிரசை பலவீனப்படுத்துவதற்காக பாஜகவை வலுப்படுத்தியவர்கள், இன்று தனது சொந்த கட்சியின் தலைவர்களை பாதுகாக்கவே போராடுகிறார்கள்" இவ்வாறு சோமன் மித்ரா மம்தாவை கடுமையாக விமர்சித்தார்.